பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

139



திருக்குறள் பாட நூலன்று. இன்றைய சூழ்நிலையில் பாடப் புத்தகங்களுக்குரிய பார்வை திருக்குறளைச் சாரக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் வேலை என்பதன் பின்னுள்ள சுமை உணர்ச்சி திருக்குறளைச் சாரக் கூடாது. திருக்குறள் கற்பது, உணர்வது, நாள்தோறும் உயிர் வாழ்க்கை யிலுள்ள விருப்பத்தைப் போலச் செய்ய வேண்டிய ஒன்றாக இடம் பெறவேண்டும். நாளுக்கு நாள் நம்மைத் திருக்குறள் வளர்த்துப் புதுமைப்படுத்த வேண்டும். வீடுகள் தோறும் திருக்குறள் பயிற்சி. விதிகள் தோறும் திருக்குறள் வினைகள் வளரவேண்டும். குறைந்தது நூறாண்டுகளாவது மனிதன் வாழலாம். முறையாக வாழ்ந்தால் வாழ முடியும். சராசரி பதினொரு வயதுக்குள் கற்கவும் கேட்கவும் தெளிவாக உணரவும் கூடிய பருவம் வரலாம். பதினொரு வயதில் திருக்குறளைக் கற்க, கற்று நெறி நிற்க முயன்றால் பதினெட்டு வயதுக்குள்ளாகச் சீலமும் நெறியும் நிறைந்த மனிதனாகத் தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்க்கைக்கு ஒரு மனிதனை நெறியும் நிறைவும் உடையவனாக வளர்க்க, இனிறியமையாது ஏற்று ஒழுகத் தக்க நெறிகளாக-அடிப்படை ஒழுக்க நெறிகளாக ஐம்பத்து நான்கு நெறிகளைக் காட்டு கிறது. வள்ளுவம். அவற்றினும் அடிப்படை ஒழுக்க நெறி களுக்கும் நிலைக்களனாக-அடி நிலமாக உள்ளன. மூன்று என்று கூறுகிறது. அவை முறையே அறிவுடைமை, ஆள்வினை யுடைமை, அன்புடைமை ஆகியனவாகும். இந்நெறிகளை ஏழாண்டுக் காலம் முயன்று கற்று, வருந்தி வழக்கப் படுத்திக் கொண்டால் வாழ்நாள் முழுதும் இன்பத்தோடு வாழலாம். பலரை வாழ்வித்தும் வாழலாம். ஏழேழு பிறப்புக்கும் வாழலாம்; எல்லாம் வல்ல இறைவனுக்கும் விருந்தாக அமையலாம். முயலுவோமாக! திருக்குறள் சாதனை நூல். திருவள்ளுவருக்குக் கைம்மாறு நம்முடைய வாழ்க்கைச் சாதனையே யாம். வாழ்க வள்ளுவம்! வளர்க வள்ளவ நெறி! வையகம் இன்புறுக.