பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

141


என்ற திருக்குறள் கல்வியின் தத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆனால் இந்தத் திருக்குறளுக்கு ஏற்றவாறு நம்முடைய சிந்தனைப் போக்கு வளரவில்லை. கல்வி கற்பதற்குப் பயனுடைய நூல்கள் தேவை. சிறந்த நூல்கள் உயிர்க்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படும். நூல்கள் உயிர்க்கு மருந்து என்று குறிப்பிடுவது ஆன்றோர் வழக்கு. கோணல் நீக்கி நேர் நிறுத்துவது நல்ல நூல் என்பது தமிழ்க் கருத்து. நம்முடைய மனக் குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். அந்தக் குற்றங்கள் நீங்குகின்ற வரையில் கற்கவேண்டும். இந்த அடிப்படையில் நூல்களைப் பொறுக்கி எடுக்கும் பண்பு வளரவில்லை. மாறாக, உள்ள நோயினைப் பெருக்கிச் சீரழிக்கும் நூல்களே மலிந்து கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப், பழகின சுவைப் புலனுக்குத் தீனி தந்து மாறுபட்டு நின்று வஞ்சனை செய்யும் வஞ்சப் புலனைந்துக்கும் இரை போட்டு அழியத் துணைசெய்யும் நூல்களின் பெருக்கமும் நினைத்தால் நெஞ்சம் நடுக்கமுறுகிறது! அம்மம்ம, கொடுமை !

பயில்வதைவிட பயில்தற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதிலேயே அதிக கவனம் தேவை. அதிலேயே வாழ்க்கையின் வெற்றி அமைந்து கிடைக்கிறது. நூலாசிரியனாதல் அருமை யில் ஆகக்கூடிய முயற்சி, நூலைவிட நூலாசிரியன் உயர்ந்து விளங்க வேண்டும். சிந்தையில் சிறந்த தெளிவை, வாழ்க்கை என்ற ஏட்டில் சாதனை என்ற எழுதுகோலால் உணர்வு என்ற மையில் நனைத்து எழுதுபவனாக இருக்கவேண்டும். இதற்குப் பிறகே புற வெளிப்பாடாகிய நூல் தோன்ற வேண்டும். இங்ங்னம் தோன்றும் நூல்கள் மக்கட் சமுதாயத் திற்கு ஏணியெனவும் தோணியெனவும் பயன்படும். ஆதலால் "கற்க கசடறக் கற்பவை” என்ற வள்ளுவத்தின் ஆணை மீற முடியாத ஒன்று.