பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

155



புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி, தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும், புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஓர் உலகம்

இன்று எங்கும் ஒர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஓர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ. நா. சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப் பேரவையின் தோற்றத்திற்குக் காரணமான துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவைத் தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை-மானிடசாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓருலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓருலகக் கருத்தை மையயமாகக்கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து, அச்சத்தில் விளைந்ததன்று; அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன்மொழி, தன் இனம், தன்சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளினின்று முழுதும் நீங்கிய நூல். திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக்