இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உலகத்தில் சிறந்தது அன்பு. அன்பிற் சிறந்த தவம் இல்லை. ஏன்? அன்பே கடவுள்! அன்பே சிவம்! இத்தகைய உயர்ந்த அன்பு நெறி உலக உயிர்களைத் தழைத்து வளரச் செய்யும் அரிய உணவாகவும், அருமருந்தாகவும் விளங்குகிறது. உயிர், இந்த இனிய உடலோடு இணைந்தது ஏன்? உறவு கொண்டது ஏன்? இந்த வினாவுக்கு வள்ளுவம் விடை கூறுகிறது.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
உடல் பாவத்தின் சுமையன்று. உயிரை அன்பினில் ஈடுபடுத்தி வளர்க்கும் கருவி உடல், உயிருக்கு உடல் கிடைக்காது போனால் ஏது காதல்? ஏது நட்பு: ஏது சுற்றம்? ஏது கடவுள் பக்தி? இவ்வளவையும் படைத்துத் துறைதோறும் உயிரை அன்பினில் வளர்த்து அன்பேயாக அமர்ந்து இன்புறத்தானே இந்த வாழ்க்கை!