பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிக்குமாயின் அது இன்பத்தைத் தருவதில்லை. மாறாகத் துன்பத்தைத் தரும். இதனை,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

என்ற குறளால் அறிக

இந்த உலகத்தின் வரலாறு நெடிய வரலாறு; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் வரலாறு. எண்ணில் அடங்காத பக்கங்களில்-எண்ணில் அடங்காத கற்பனைகள்-செய்திகள் ஆகியவற்றால் வரலாறு பெருகி வளர்ந்து வந்திருக்கிறது. இப்பொழுதும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும்.

இந்த மனித குலத்தின் வரலாறு இடையீடின்றித் தொடர்வதற்கு எது அடிப்படை? பேரரசுகளா? போர்க் களங்களா? அறிவாற்றல்களா? இல்லை, இல்லை! இவையனைத்தும் பல சமயங்களில் மனித உலகத்தை அழிக்கவே முயன்றன. அந்த அழிவிலிருந்து மனித உலகத்தைக் காப்பாற்றியது சான்றாண்மையின் முதிர்ந்த பண்பாடுகளே, பண்பாடு உடையவர்களேயாவர்.

இயேசு சிலுவையில் தொங்கிச் சிந்திய செந்நீர் பண்பாட்டின் சின்னம். செந்நீரால் சிலுவை கழுவப் பெறவில்லை. பாபிகளின் பாபம் கழுவப்பெற்றது. நபிகள் நாயகத்தின் புனித தியாகம் பாபத்தைக் கழுவி வரலாற்றுக்குப் புத்துயிர் ஊட்டியது. புத்தரின் போதனைகள் பண்பாட்டின் பொழிவு. அது உலகத்தைத் தொடர் சரித்திரமாக்கியது. ஆட்சி மேலாதிக்கத்தின் கொடிய இரும்புப் பிடியை உடைத்து, கொடிய நீற்றறையைக் குளிர்சாதன மாக்கிய அப்பரடிகளின் தண்கருணை, வரலாற்றை வளர்த்தது.