பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நல்லெண்ணம் என்பது பருவுடல் அமைப்பால் மதிப்பீடு செய்யக்கூடியது அல்ல. நல்லாண்மை என்பது ஆள்வினையுடையவராக இருத்தல்; பொருள் செய்யும் துறையில் வெற்றி பெறுதல்; தம்மைச் சார்ந்தோரின் வாழ்க்கையை வளமுறப் பேணிப் பாதுகாத்தல்; தம்முடைய குடியினரையும், சுற்றத்தினரையும் தமதெனப் பிறப்பின் சார்பாலும், உறவினாலும் மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமாகத் தமதாக்கிக் கொள்ளுதல் சிறப்பினும் சிறப்பு. அதுவே நல்லாண்மை.

பலரோடு கூடி வாழப் பிறந்த மனிதன் சமூகக் கடமைகளை, ஒருவரையொருவர் காக்கும் பணியை, ஒருவரையொருவர் சாட்டுதல் சொல்லித் தட்டிக் கழிக்கக் கூடாது; எண்ணிக்கையைக் காட்டியும் பணியின் பொறுப்பினைப் பங்கு போடக்கூடாது. "அவர் தரவில்லையே, அவர் செய்யவில்லையே, எனக்கு மட்டும் என்ன வந்தது?" என்றெல்லாம் ஒப்பிட்டுக் கூறுதல் சமூக ஒழுக்கமன்று. இந்த மனப்போக்கு நல்லாண்மையின் பாற்பட்டதுமன்று. சமூக மேம்பாட்டுக்கும் துணை செய்யாது. ஏன்? காலப்போக்கில் தனிமனித மேம்பாடும் தடைபடும்.

ஒரு போர்க்களத்தில் பலநூறு ஆயிரம் போர்வீரர்கள் போர் செய்தாலும் அந்த வீரர்கள் அனைவரும் போரினால் வரும் விழுப்புண்கள் அனைத்தையும் தாங்கிக்கொள்வதில்லை. மிகவும் வலிமையும் வீரமும் உடைய வீரனே தாங்கிக் கொள்கின்றான். அதுபோல சமூகத்திற்குள்ளும் பலர் இருந்தாலும் சமூகத்தின் பொறுப்புகளை ஏற்று, தாங்கி, பொறுத்துச் செயலாற்றுபவன் கண்ணேயே கடமை வந்து அமையும். அவர்கள் குடியின் பொறுப்புகளைத் தாங்குதல் கடமை.

குடிசெயல்-சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்தல் எளியதொன்றன்று கடினமானது; காலங்கருதிச்