பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துன்பம் ஆகியன துன்பமேயல்ல. அவற்றினும் சிறந்த இன்பம் வேறு இல்லை. இதனை,

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு

என்று திருக்குறள் பேசுகிறது.

ஒரு குடியில் ஒருவரோ, இருவரோ நல்லாண்மையுடையவராக இருத்தல் போதாது. ஏதோ ஒரு துன்பம் தோன்றி அந்த ஒருவனும் வீழ்வானானால், அடுத்து அந்தக் குடியைத் தாங்கி நிற்பாரில்லாது போனால், அந்தக் குடி கெடும். ஆதலால், குடியினைச் சார்ந்த பலரும் நல்லாண்மையுடையவராகக் குடிசெயற் பாங்குடையவராக வளர வேண்டும்.

ஒரு மனிதனுக்குத் தன்னுடைய குடிசெயல் பணியில் ஈடுபடுதலும் அந்தப் பணியை இடையீடின்றி முடித்தலும் பெருமைக்குரியது என்பதையும், ஆன்ற அறிவும், ஆள் வினையும் உடையோரால் குடி உயர்ந்து விளங்கும் என்பதையும், குடி செய்வார்க்குத் தெய்வம் துணை செய்யும் என்பதையும், குடியைத் தாழாது காப்பாற்றுவோனுடைய கருத்துகள் தாமே முடியும் என்பதையும், குடியோடு கூடித் தழுவி வாழுதற்குரிய சிறந்த குண நலன்கள் பெற்றவனை, மற்றவர்கள் சுற்றமாகச் சூழ்வார்கள் என்பதையும், குடி செய்வார்க்கு இல்லை பருவம், மடி, மானம் என்பதனையும் தேறத் தெளிந்தோம்.

நம்முடைய குடி, தமிழ்க்குடி, திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த குடி தம்முடைய குடியினை நாம் ஆக்க வேண்டும் என்ற உணர்வு நலம் தம்மை உந்திச் செலுத்துவதாக.