பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

என்றோதுகிறார்.

உழுதலினும் சிறப்பு எருவிடுதல்; அதனினும் சிறப்பு களையெடுத்தல்; அதனினும் சிறப்பு நீர் பாய்ச்சுதல், அதனினும் சிறப்பு விலங்குகளாலும் பூச்சிகளாலும் அழிவு வராமல் பாதுகாப்பது என்று எடுத்தோதும் நுட்பத்திறன் எண்ணி மகிழத்தக்கது. எரு இடுதல் மிக மிக அவசியமான ஒன்று. அதிலும் இயற்கை உரமிடுதலே சிறப்பு. பசுந்தழை உரமும், சாணம் குப்பைகளால் தயார் செய்யப்பெற்ற 'கம்போஸ்ட்' உரமும், நிலத்திற்கு மிகவும் ஏற்ற உரம். இத்தகைய உரங்கள் நிலத்திற்குப் பூசாரம் தருகிறது. அதே நேரத்தில் ஒருசேரப் பயிரர்களுக்கும் ஊட்டச்சத்து கொடுக்கிறது. ஆதலால், இயற்கை எரு இடுதலே சிறப்பு.

இயற்கை உரமிடுவதில் கொஞ்சம் குறைவாக உரமிட்டு விட்டாலும் கூடக் கேடு ஒன்றுமில்லை. ஆனால் அமோனியம் சல்பேட்ட, யூரியா போன்ற நவீன உரங்கள் இவ்வளவு சிறந்த பயன்களைத் தருவதில்லை. இந்த நவீன உரங்கள் பயிர்ச் செடிக்கு ஊட்டம் தருவதில்லை.

நிலத்தில் ஏற்கெனவே இருக்கின்ற உரத்தை-பயிர்ச் செடிகள் எடுத்துக் கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதை, பயிர்ச் செடிகள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித்தரும் வேலையைத்தான் இந்த நவீன உரங்கள் செய்கின்றன.

இதை விவசாய வல்லுநர்கள் "கிரியா ஊக்கி” என்றே சொல்லுகின்றனர். ஆதலால் நவீன உரங்களால் நிலத்திற்கும் ஊட்டமில்லை, பயிருக்கும் ஊட்டமில்லை. மாறாக நிலத்தில் உரமேயில்லாதபோது. நவீன உரத்தையிட்டால் பயிர் வளராமல் கருகிப் போகிறது.