பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவு

றிவு, வாழ்க்கைக்கு இன்றியமையாதது; மனித வாழ்க்கைக்குக் கடவுள் வழங்கிய பரிசுகளில் தலையாயது. ஆனால் இன்று எது அறிவு என்று இனம் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏன்? பலரிடத்தில் அறியாமையே அறிவுபோலக் காட்சியளிக்கிறது. அம்மம்ம! தம்மிடமுள்ள அறியாமையையே அறிவு என நம்பி நிலைதடுமாறி நிற்பவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் பேர்! அவர்கள் அகந்தை கொண்டவர்களாக நடமாடுகிறார்கள். "ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு" என்று வள்ளுவர் கூறுகிறார்.

பன்றிகளைக் கட்டுத்தறியினின்றும் அவிழ்த்து விட்டால் சந்தனக் குவியல்பால் நாடா. மலக்குவியலை நோக்கியே ஓடும். அதுபோல் அறியாமையையே அறிவென நம்பித் திரிபவர்கள் எதிலும் அறிவை நாடமாட்டார்கள்; ஆபாசங்களையே தேடுவர்.

அதையே விரித்து விரித்து உரைப்பர். ஆனால், தமது அறியாமையை மறைக்க "அறிவு, அறிவு” என்று சொல்லிக் கொள்வர். இஃது அறிவு என்ற பெயரில் உலா வரும் ஒருவகை அறியாமை. வேறுசிலர், சில செய்திகளை அறிந்துகொண்டு அவற்றைக் கிளிப்பிள்ளை போலச் சொல்வர். சொல்லும் செய்திக்கும் அவர்களுக்கும் உணர்வு அடிப்படையில் யாதொரு விதமான தொடர்பும் இராது.

இதுவும் ஒருவகை அறியாமையே. வேறு சிலர், புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பர். இவர்கள் ஒருவகையான அஜீரண வாதிகள். இவர்களுக்கு அறிவினுடைய வாசனையே இருப்பதில்லை. ஆதலால் உணர்வும் இருக்க வழியில்லை. கல்வி, அறிவு பெறுதற்குரிய வாயில்; ஆனால், கல்வியே அறிவல்ல. செய்தி அறிவு பெறுதற்குரிய வாயில்;