பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்தனையாலும் தேராத மனிதரை ஒதுக்குகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்; நம்மையும் ஒதுக்கச் சொல்லுகிறார்; ஒதுங்கவும் சொல்லுகிறார். மனிதனை வளர்த்து வளர்த்துத் தேற்றித் தேற்றிக் கொண்டு வந்த வள்ளுவர் ஒன்றாலும் இயலாத பயனற்ற கீழ் மக்களைத் தள்ளி மூடும் அதிகாரமே 'கயமை யாகும்.

விலங்குகளில் சாதி பிரிக்கிறோம்; காய்கறிகளில் சாதி பிரிக்கிறோம். ஆனால் நாம் மனிதரில் சாதி பிரிப்பதில்லை. சாதி பிரிப்பதில்லையா? இன்றுதான் ஏராளமான சாதிப் பிரிவுகள் இருக்கின்றனவே என்று கருதுகின்றீர்களா? இன்று பிரித்துள்ள சாதிமுறை பிறப்பினாலும் ஆதிக்கத்தினாலும் ஏற்பட்டவையாகும். ஒரோ வழி தொழிலின்பாலும் பட்டவை. ஆனாலும், திருவள்ளுவர் இனம் பிரித்துக் காட்டுவது பிறப்பினாலுமல்ல; தொழிலாலுமல்ல. மேன் மக்கள், கீழ்மக்கள் என்று பிரிக்கிறார். இந்தப் பிரிவு குணத்தின்பாற்பட்டது. பலர் மக்கள் போலவே நடமாடுகிறார்கள். ஆனால் அவர்கள் உருவத்தினாலேயே மக்கள். ஆனாலும் குணங்கள் மக்கட் சாதிக்குரியன அல்ல. "மக்களே போல்வர்" என்ற சொற்றொடரில் உள்ள தேற்றேகாரத்தில் வேதனை நிறைந்த நகைச்சுவை மண்டிக் கிடக்கிறது.

நன்மக்கள் நாள்தோறும் தமது தகுதியினை, சீலத்தினை, குடிச்சிறப்பினை இழந்துவிடக்கூடாதே என்று எண்ணிக் கவலைப்படுவர். ஆனால் கீழ்மக்களோ கவலையில்லாத மகாராஜாக்கள்! அவர்களுக்குப் பழி, பாவமில்லை; சீலம், நோன்பு இல்லை; குடிச்சிறப்பும் இல்லை! எதைக் காப்பாற்றிக் கொள்ளக் கவலைப்பட வேண்டும்? என்று பரிகாசமாக-ஆனாலும் வேதனை நிறைந்த உள்ளுணர்வுடன் திருவள்ளுவர் பேசுகின்றார்.