பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தாம் வாழ்தலை-சமூக உணர்வின்றித் தாம் வாழ்தலை வாழ்தல் என்று யாரும் ஒப்பார். இது பிழைப்பு ஆகும். பாரதி, "சீச்சி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று பேசுவான். தாம் வாழ்தலுக்கு ஒன்றும் ஒப்பரிய அறிவும், அறிவறிந்த ஆள்வினையும் வேண்டாம். அப்படியானால் குறிக்கோள் எது? குறிக்கோள் என்பது பயனுற வாழ்தல்; பிறர் பயனுற வாழ்தல்! தனக்கென முயலுதல் விலங்கியல் குணம்! பிறர்க்கென முயலுதல் மனிதவியற் பண்பு.

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறிதும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!

(புறம் 182)


என்பது புறநானூறு. சங்க காலத்தில் பொருள் தேடும் முயற்சி இருந்தது. ஏன்? அகநானூற்றுத் தலைவி பேசுகிறாள்.

இல்லென் றிரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப
நம்மினும் பொருளே காதலர் காதல்

என்ன அந்த அகநானூற்றுப் பாடலடிகளாகும். இதுவே பண்பு, மானுடப் பண்பு. மானுடத்தின் குறிக்கோள்! பிறர் பயனுற வாழ்தலே தவம், நோன்பு என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன. 'பெறுவதைவிடக் கூடுதலாகக் கொடு' (Do more than get; give) என்றார் லிராய் ப்ரெளன்லோ.