பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

33



ஆனால், நம்முடைய நாட்டில் பரப்பப்படும் நாத்திகம் கொச்சைத் தனமானது, நல்லொழுக்கத்திற்கு மாறானது. இவர்களுக்குக் காதல், கற்பு என்பதெல்லாங் கூட வெறும் பேச்சுத்தான். இவர்கள் தேடித் தேடித் தம்முடைய பேச்சுக்கும் எழுத்துக்கும் மோப்பம் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் ஒழுக்கங்கெட்டவர்கள் எழுதிய கதைகள் தாம்! தப்பித் தவறி ஒன்றிரண்டு நல்லநூல்கள் இவர்கள் கையில் அகப்பட்டுவிட்டால் கருவாட்டுக்காரி கதை போல் பழக்க வாசனையால் ஆபாசத்தையே காண்கிறார்கள்; அல்லது ஏற்றுகிறார்கள்.

இத்தகைய தவறான நூல்களைக் கற்பதைவிட கல்லாமை கோடி நன்மைதரும். காரணம் ஒரே வகையான அறியாமை மட்டுமே இருக்கும்! முறைபிறழ்ந்த உணர்வுகளும் மயக்கமுமே இருக்கும். நல்ல நூல்கள் கடவுளைப் போல் பாராட்டத்தக்கன. நல்ல நூல்கள் நல்ல நண்பனைப்போல நல்லாற்று நெறிப்படுத்துவன. நல்ல நூல்கள் அகனமர்ந்த காதலியைவிட இன்பமளிப்பன. நல்ல நூல்கள் உயிர்க்கு உற்ற மருந்து என்ற ஒரு மேலை நாட்டுப் பழமொழி உண்டு.

ரஸ்கின் என்னும் ஏடுதேடு காதலர், நூல்களைக் கற்கும் முயற்சியைவிட கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந் தெடுக்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை” என்று வலியுறுத்துகிறார். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். நூலாசிரியன் உணர்வோடு ஒன்றித்துக் கற்க வேண்டும். நூலாசிரியன் காலத்திற்கும் கற்போன் காலத்திற்கும் உள்ள இடைவெளியை உய்த்தறிந்து காலத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

காலச் சுழலில் சிக்கிய நூலாசிரியன் கூறும் செய்தி துளில் உள்ள நல்லனவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும்.