பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முறுவதன்று. நெஞ்சத்தில்-நெஞ்சத்தின் உணர்வில் விளக்கம் பெறுவது. அதுவே, புகழ் மிக்க வாய்மை. அதனாலேயே வாய்மையிற் சிறந்தது பிறிதொன்றுமில்லை என்றார் வள்ளுவர்.

வாய்மை, மனத்தில் தங்கவேண்டும். மனத்தில் வாய்மை கொண்டு வாழ்த்துவோர் வாழ்த்து, வையகத்தை நடத்தும். அச்சொற்கள். மந்திரத்திற் சிறந்த செம்பொருட் சொற்கள். இங்ங்னம், மனத்தில் வாய்மை தேக்கிப் பேசு வோர், தானம் செய்வாரினும், தவம் செய்வாரினும் உயர்ந்தோர். தானம் பிறர் நோக்கிச் செய்யப்பட்டாலும், அதன் நோக்கம், தான் சொர்க்கம் புகவேண்டும் என்பதே.

ஆக, தானத்தின் நோக்கம் தற்சார்புடையது. தவம், முற்றாகத் தற்சார்புடையது; அதனால்தான் போலும், சில ஆண்டுகள் தவம் பயிற்றியோர் உலகியலுக்கு வந்தபோது முரண்பாடுகளின் மொத்த உருவமாயினர். அவர்களால் மற்றவர்களுக்கு விளைந்தது தீங்கே! காரணம், தற்சார்பி லேயே சுழன்ற மனம், பிறர்நலம் எண்ண மறுக்கிறது. ஆனால், வாய்மை பிறருக்குத் தீங்கு செய்யாத நோக்கத்தில் முகிழ்க்கிறது. பிறரை இன்புறுத்தலில் வளர்கிறது. அவ்வழி தானும் வளர்கிறது. இந்த வாய்மை, தவத்தினும் சிறந்தது.

வாய்மை வழி வாழப்பயிலுவோமாக எவ்வுயிர்க்கும் தீமையிலா அன்பு காட்டுவோமாக! அதுவே, வாய்மையின் ஊற்று! வாய்மை வழியே வள்ளுவர் வழி.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.