பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


டாலும் குட்டைகள் தோன்றும், அதுபோல், சிந்தனையற்ற சமுதாயம் தேக்கநிலை அடைந்துவிடும்.

சங்ககாலத்திலும், காப்பியக் காலத்திலும் தமிழ்ச் சமுதாயத்தில் சிந்தனைத் துடிப்பு இருந்திருக்கிறது. தேவாரக் காலத்திலும் கூடச் சிந்தனைத் துடிப்பு இருந்திருக்கிறது. ஆனால், அச்சிந்தனைக்கு எதிர் சக்திகளாக இருந்தவர்கள் அதாவது, சிந்தனை செய்ய மறுத்தவர்கள் அந்தச் சிந்தனையின் ஆற்றலைச் சிதைத்து விட்டனர். வெளிப்படையாகச் சிதைத்தால் மக்கள் எதிர்ப்பு ஏற்படும் என்று அஞ்சி அச்சிந்தனைக்கு செயலுருவம் கொடுப்பதற்குப் பதிலாக அப்பட்டமான வழிபாட்டுருவம் கொடுத்து விட்டனர்.

ஆக, சிந்தனை செய்து பழகுக. கண்ணாற் காணப்படுகின்ற காட்சியை ஒட்டிச் சிந்தனையைத் தொழிற்படுத்துக படிக்கும் நூற் கருத்துக்களை விரிவாக்கும் வகையில் சிந்தனையை இயக்குக. செவிகளால் கேட்கும் செய்திகளை, உணர்ச்சி கலக்காமல் முதலில் சிந்தனைப் பட்டறைக்கு அனுப்பித் துய்மை செய்து அறிவாக்குக. மனிதனுக்குள்ள ஒரே ஒரு சிறந்த இயல்பு சிந்தனைதான். சிந்திக்கத் தெரியாதவன் முழு மனிதனாதல் அரிது.

ஆகவே, சிந்தனையால், சொல்லால், செயலால் எல்லாம் அறங்கள் செய்யுங்கள்.

குறையை அகற்றி நிறை வாழ்வு பெற நாளும் தூய சிந்தனை செய்யுங்கள். தூய சிந்தனையை ஆக்கமாக வளர்த்துக் கொள்வதும், வாழ, வளர வழிகாட்டுவதும் நல்லோர்களின் பண்பு ஆகும்.

'சிந்தனை செய் மனமே! என்னும் இனிய பாடலும் நினைவுகூரத் தக்கது.

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.