பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆனாலும் மனத்தில் மாறாது நிற்கும் இயல்புக்கு நினைவு என்று பொருள் கோடல் தவறன்று. பழகிப் பிரிந்த இருவர் சந்திக்க நேரிடுகின்ற பொழுது "நினைவிருக்கிறதா?” என்று கேட்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கின்றோம். நினைவைக் கொல்லும் மறதி, வாழ்க்கையை அழிக்கும் பெரும்பகையாகும். மறதித் தன்மையுடையவர்கள் எநத ஒரு காரியத்தையும் முறையாகச் செய்யமாட்டார்கள். மறதி, காரியங்களைக் கெடுக்கும்; நண்பர்களை இழக்கச் செய்யும். பொருளை இழக்கச் செய்யும். இத்தகைய கொடிய மறதியை அழித்து வெற்றி வாகை சூடுவது நினைவேயாகும். மறதியைப் புறங்கான, நினைவாற்றலை யடைந்து மகிழ என்ன செய்ய வேண்டும்? அதற்குரிய முயற்சி அரிதானது அல்ல; எளிதே!

தான் எண்ணிச் செய்யும் செயல்களில் ஒருமைப் பாட்டுணர்வுடன் ஈடுபட வேண்டும். அடுத்து, எதையும் எவ்வளவு இடர்ப் பாடுகள் இருந்தாலும் குறித்த நேரத்தில் குறித்த முறையில் செய்ய வேண்டும். காலம் தவறிச் செய்யும் கடமைகளும், முறை தவறிச் செய்யும் கடமைகளும், ஆர்வ எழுச்சியுடன்-இலட்சியத் துடிப்புடன் செய்யப் பெறாத கடமைகளும் மறதிக்குத் துணை செய்யும் களன்கள். இதுவரை, தெரிந்த ஒன்றை நினைவிற் கொள்ளவும் அல்லது மறதி வாராதிருக்கவும், வழிவகை கண்டோம்.

மனத்தின் அடுத்த மிக நுட்பமான தொழிற்பாடு எண்ணுதல் என்பதாகும். எண்ணுதல் நினைவிற்கு முந்திய தொழிற்பாடாகும். சிந்தனை, தொடர்ந்துவரும் தொழிற் பாடாகும். எண்ணுதல் என்பது ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைய வேண்டும் அல்லது செய்யவேண்டும் என்று. அலை வின்றி எண்ணுவதாகும். இன்று நம்மில் பலர், "நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். தவறி விட்டது; எப்படியோ தவறி விட்டது" என்று பல தடவை சொல்லி அழுகின்றனர்.