பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

43



எப்படித் தவறிற்று என்பது கேட்டால் மீண்டும் விடை கிடைக்கும். "எப்படியோ தவறி விட்டது" என்பர். ஒரு சிலர், வேலை மிகுதியால் தவறி விட்டது என்பர். இது தவறு. வேலை மிகுதியால் காரியங்கள் தவற முடியாது. வேண்டு மென்றால் ஒத்திப் போடலாம்.

இங்கேயும் ஒர் ஆபத்து உண்டு. ஒத்திப் போடுதல் என்பது வேலை மிகுதியினாலும் உண்டு. சோம்பேறித் தனத்தினாலும் உண்டு. வேலை மிகுதியினால் ஒத்திப் போடுபவர் எண்ணிக்கை மிகக் குறைவு. காரியத்தின் பாலுள்ள அலட்சியப் பார்வையினாலும் சோம்பேறித் தனத்தினாலுமே பலர் ஒத்திப் போடுகின்றனர்.

எண்ணுதல் என்பது வாழ்க்கையின் வெற்றி அனைத்திற்கும், அடிக்கல் போல் அமைவதாகும். எண்ணத்தில் தெளிவும் உறுதியும் இருக்குமானால் காரியங்கள் தவறா. இன்று பலர் அழுது புலம்புகின்றனர், ஏன்? நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லையே என்று எண்ணத் தெரியாதவர்கள்-அதேபொழுது பழிதூற்றும் இயல்பினர் தங்களுடைய காரியக்கேட்டுக்கு அவர் காரணம், இவர் காரணம் என்று பிறர்மேல் பழிதூக்கிப் போடுவர். ஆனால் வள்ளுவர், ஒருவரின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவரவர் காரணமே தவிர மற்றவர்கள் அமைய முடியாது என்கின்றார். எண்ணியதை யாதொரு குறையுமின்றி எண்ணியபடியே அடையலாம் என்பது வள்ளுவர் கருத்து.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

எண்ணிய எண்ணியாங்கு பெற வேண்டுமென்றால் எண்ணத்தில் திண்மை யிருக்கவேண்டும். இன்று யாருக்குத் தான் எண்ணம் திண்ணியதாக இருக்கிறது. இன்று பலருக்கு நொய்ந்து கிடக்கிறது; சபலங்களால் சலித்துக் கிடக்கிறது;