பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

47


அகற்றப்பட வேண்டும். நேற்றுக் கூட்டப்பெற்ற வீட்டில் எப்படி இன்று குப்பை வந்து சேர்ந்ததோ, அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் மனத்தில் தீயன சேர்தல் இயல்பு. அவற்றை, நாள் தோறும் அகற்றி நல்லன சேர்த்துக் கொள்ளுதல் நல்ல வண்ணம் வாழுதற்கு அடிப்படையாகும்.

வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் பலப்பல. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே முயன்று அடைதல் எளிதன்று. ஆனால், மனத்துய்மை என்ற பேரறத்தை நாம் அடைந்து விட்டால் அவ்வழி மற்ற அறங்களும் குண நலன்களும் வாழ்க்கையில் எளிதில் வந்து அமையும்.

ஒரு சின்னஞ்சிறிய புகைவண்டி நிலையத்திற்குச் சென்றால், அங்கிருந்து நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் நேரிடையாகப் பயணத்தைத் தொடங்க முடியாது. ஆனால், ஒரு புகைவண்டிச் சந்திப்பு நிலையத்துக்குச் சென்றால் அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள இயலும்.

நல்லறங்களின் சந்திப்பு எது? மனத்துரய்மை, மனத்தூய்மை என்ற ஒரு சிறந்த பண்பாட்டின் வழியாகப் பல்வேறு பண்பு நலன்களை நாம் பெற முடியும்.

திருவள்ளுவர், மனத்துாய்மை என்ற கொள்கையில் ஆழமான நம்பிக்கையுடையவர். மனத்துாய்மையில்லாது செய்யப் பெறுகிற அறங்கள் அறங்களல்ல. அவை ஆரவாரத் தன்மையான-வெளிப்பகட்டு என்று திருவள்ளுவர் மறுக்கின்றார்.

சிலர், வீட்டிற்கு வெளியே வெள்ளையடிப்பர். அங்ங்னம் செய்வது வாழ்வதற்காக அல்ல. மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக! ஆனால், அந்த வீட்டிற்குள்ளே சுவர்களில் ஏராளமான சந்து பொந்துகளும் அவற்றுக்குள்ளே உயிர் குடிக்கும் நச்சுப் பூச்சிகளும் இருக்கும்.