பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

49


வாயிலில் முதன்மையானது கல்வி, உடலுறுதிக்கு உணவும், உயிர் உறுதிக்குக் கல்வியும் இன்றியமையாதன.

ரோமாபுரிப் பேரரசன் ஒருவன் தன்னுடைய நூலகத் தின் வாயிலில் "உயிர் மருந்து நிலையம்” என்று பெயர் எழுதி அமைத்தனன். உடலுக்குப் பசி ஒருவகைப் பிணியேயாம். தமிழ் இலக்கிய உலகம் "பசிப்பிணி" என்றே கூறும்.

உடற்பசிக்கு உணவளிப்பவனைப் "பசிப்பிணி மருத்து வன்” என்று புறநானூறு வாழ்த்தும். அதுபோல வாழும் உயிர்க்கு அறிவுப்பசி இருத்தல் வேண்டும். இந்தப் பசிக்குரிய கல்வியை வழங்குபவனை ஆருயிர் மருத்துவன் எனல் மிகையன்று.

திருவள்ளுவர் உயிர்க்கு இன்றியமையாத, கற்றல் கடமையினை உடன்பாட்டிலும் உணர்த்துகின்றார்; எதிர் மறையிலும் எடுத்துக் காட்டுகின்றார். மனிதனுக்குக் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை. மனிதன் கண்ணினால் பெறும் பயன் ஒன்றல்ல; பலப்பல. மனிதனுடைய அறிவு வாயில்களில் கண்களே தலையாயவை.

கண்கள் தாம் காணும் காட்சியின் மூலம் உயிர்க்கு அறிவைச் சேர்க்கிறது. நூல்களைக் கற்கப் பயன்படும் ஒளி தந்து உயிர்க்கு அறிவைச் சேர்த்துக் கொள்ளத் துணை செய்கிறது. சிறந்த காட்சிகளைக் கண்டு களித்து மகிழத் துணை செய்கிறது. ஏன்? ஒரு மனிதனை இன்னொரு மனிதனோடு அல்லது பால் வேறுபட்ட பிறிதோருயிரோடு அன்பு வழியில் இணைத்து இன்பம் சேர்ப்பதில் கண்தானே முக்கியமான பங்கு வகிக்கிறது!

இத்தகைய அருமையான கண்கள் சிலரிடத்துப் புண்களாக விளங்கிவிடுவதைத் திருவள்ளுவர், இடித்துக் காட்டத் தவறவில்லை. யாருக்கு எப்பொழுது கண்கள் புண்களாகின்றன: கல்லாதான் முகத்தின் கண்கள் புண்கள் ஒன்கிறார். ஏன்?