பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன்?-வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.

மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம்-மிக்கபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்.
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கடவுள் கண்ணால் காட்டப்படும் அல்லது காணப்படும் பொருள் அல்ல; அது உணர்வுப் பொருள். மனிதனுக்குக் கண்களேதான் சிறந்த உறுப்பு அல்ல; அவனது சிந்தனையே உயர்ந்தது. அந்த உணர்வில் எழும் துய சிந்தனையாலேயே மனிதன் கடவுளைக் காணமுடியும். இறையுணர்வே இல்லாதவர்கள் எப்படிக் காண முடியும்? எதற்கும் அவன் அருள் வேண்டும்.

கல்லாத பாமரர்களின் குறைமதிக்கு விஞ்ஞானத்தின் மிக நுட்பமான உண்மைகள் புலப்பட மாட்டா. அதனால், விஞ்ஞான உண்மைகள் யாவும் கட்டுக் கதைகள் என்று நாம் பொருள் கொள்ளலாமா? ஆன்மீக உணர்வு கிட்டும் பேறு கிடைத்தால் இறைவன் நமக்கும் உண்மையிலும் உண்மை யாவான். கடவுளை வணங்குவது அவனுக்குத் தொண்டு செய்ய அல்ல; மனிதனுக்குத் தொண்டு செய்ய எனக்கு வலிமையைத்தா, என்று கேட்க, மாபாரதத்தில் கர்ணன் கூடக் கண்ணனிடம், "இல்லையென்று இரப்போர்க்கு இல்லையெனா இதயம் தா" என்றுதான் கேட்டான்.

உற்றநோய், நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

என்று குறள் கூறுகிறது.