மனம் ஒரு மாளிகை
63
வாழ்க்கையின் மையம் மனமே. சிந்தனைக்குக் களம் மனம் செயல், ஊக்கத்திற்குக் களம் மனம் செயலின் நோக்கமும் மனத்திலேயேயாகும். கைகள் செய்யலாம். கால்கள் நடக்கலாம்; கண்கள் பார்க்கலாம். ஆனாலும் அச்செயல்களின் நோக்கத்தைத் தெளிவாக வெளிக்காட்டா. ஒரோவழி காட்டலாம். ஆயினும் சிந்தனைக்கும் செயலுக்கும் முரண்பாடிருக்கலாம். அப்போது சிந்தனை பயன் தருமா? செயல் பயன் தருமா? ஒருவன் இனிமையாகப் பேசுகிறான். ஆனாலும் நெஞ்சில் கரவு இருக்கிறது. இவற்றில் எது பயன்தரத் தக்கது? இனிய பேச்சன்று. நெஞ்சில் மறைந்து கிடக்கும் கரவே.
சிலர் முயற்சிகள் பல செய்தும் வெற்றி அடைவ தில்லை. அத்தகையோர் ஏதாவது சமாதானம் சொல்வர்; கொடுத்து வைக்க வில்லை; போதாத காலம், உலகம் சரியாக இல்லை என்பன போன்ற வேதாந்த மொழிகளை உதிர்ப்பர். ஆனால் உண்மை அதுவன்று. அவர்கள் செயல்பட்டது என்னவோ உண்மை. ஆனால் அச்செயல் பற்றிய எண்ணம் தெளிவாக-உறுதியாக அவர்களுக்கு இல்லை.
மண்ணில் நிற்கும் மரமெல்லாம் புயலில் நிற்பதுண்டோ? மண்ணில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்த மரமே புயலில் நிற்கும். அதுபோல மனத்தில் தெளிவாகஉறுதியாக எண்ணிச் செய்யும் செயல்களே வெற்றி தரும்.
அறம் செய்தால் போதாது. அறச்சிந்தனை வேண்டும். "அறந்தரு சிந்தையோன்” என்பது இலக்கிய வழக்கு. அறம் எந்த நோக்கத்துடன் செய்யப்படுகிறதோ அந்தப் பயனையே தரும். அறம் புகழ் கருதிச் செய்யப்பெற்றால் புகழைத் தரும்-அறத்தினைத் தாராது; புண்ணியத்தினைத் தாராது; இவ்விரண்டிற்கும் மேலாய இன்ப அன்பினை எப்போதும் தாராது.