பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

65


அன்பிற் பூசிப்பதைக் கூடும் அன்பினில் கும்பிடலை' நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

அங்ஙனமின்றித் தேவைப் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு கடவுளை வணங்கினால் ஒருகால் தேவைகள் கைகூடலாம். ஆனால் மனத்தின் மாசு அகலாது; மனம் வளராது; திருவருள் கிடைக்காது; ஆக, செயல் பலனைத் தராது. செயலுக்குரிய நோக்கமே பயன் தரும்.

இத்தகைய நியாயமான அறவுணர்வு பழந்தமிழர் வாழ்க்கையில் விளங்கித் தோன்றிற்று. பழந்தமிழர் அறம் செய்தனர். அறத்தை அறத்தின் நோக்கத்துடனேயே செய்தனர். வீடுபேறு கூட அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. அன்றைய தமிழக அரசர்களும் இத்தகைய அருளார்ந்த சீலத்தோடுதான் விளங்கினர்.

ஆய்அண்டிரன் ஒரு குறுநில மன்னன், அறம் செய்யும் இயல்பினன்; அவனை முடமோசியார் அறிந்து பாராட்டுகிறார். இப்பிறப்பில் அறம் செய்தால் மறுமையில் இன்பம் பெறலாம் என்ற எண்ணத்தில் ஆய் அண்டிரன் அறம் செய்வதில்லை. ஆய் அண்டிரனின் வாழ்க்கையில் அறம் வாணிகப் பொருளில்லை. அறமே அவன் செயல், அறமே அவன் நோக்கம்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்

என்பது பாடல் அடிகள். இத்தகைய அறச் சிந்தனை நம் மனமாளிகையில் நின்று நிலவுமானால் உலகில் ஒப்புரவு நெறி வளரும். நனி சிறந்த நட்பு கால் கொள்ளும். கல்விக் கூடங்கள் அறிவாலயங்களாகத் திகழும். திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாகத் திகழும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன
ஆகுல நீர பிற.

தி.II.5