பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உயிர் வாழ்வான்

திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. மனிதன் ஒரு சமூகப் பிராணி என்றார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோவழி, சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கை முறை இருந்தாலும் கூட அஃது அச்சத்தின் பாற்பட்டதே யொழிய, அன்பின் பாற்பட்டதன்று.

சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்பதென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும் பொறிகளின்மீது தனியரசு செலுத்துவோரே கூட்டுப் பொது வாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.

ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் இல்லாதவர்களுக்குக் கொடுத்தல்-உதவி செய்தல் என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை-இயல்பை ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார். ஈகை, ஒப்புரவறிதல் இவ் விரண்டும் ஒன்றுபோலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு உடையன.

ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையார்-இல்லார் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ் வழி புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதூக்கி நிற்கும். ஒப்புரவறிதலில் உடையார் இல்லார் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும்