பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

69


தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன் முயன்று செய்யக்கூடியவை -பெறக் கூடியவை. ஆனால் வீடு, அறம் பொருள் இன்பத்தை முறையாகச்செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனி இயல் அமைக்கவில்லை. எனினும் ஒரோவழி குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஒரு பொருளியல் துறை அறிஞர். பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவைபற்றித் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்: பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார். வறட்சித் தன்மையுடைய மாயாவாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கிய பிறகுதான், தமிழர் வாழ்வியல் கெட்டது; வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது. இந்த நிலையினை உணர்ந்த தமிழகச் சிவநெறிச் சான்றோர் களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர்.

"முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்!” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றும், "பொன்னா னாய், மணியானாய்” என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.

பொருள் உலகியல் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர் பொருளைப் போற்ற வேண்டும் என்று கூறுகின்றார். பொருளைப் போற்றுதல் என்றால் பொருளைப் பூசித்தல் என்பது பொருளன்று. பொருளைப் பாதுகாத்தல் என்பதுதான் பொருள்.