பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

73


நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கிறது.

வள்ளுவம் வையகத்தின் வரலாற்றுச் சந்திப்பில் பிறந்தது. வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப்பிறந்தது. நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றலைப் பொறுத்ததல்ல. கசடு அறுதலிலேயே இருக்கிறது என்று உணர்த்தப் பிறந்தது. மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது. ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல் தடுக்க-ஆவது காட்டப் பிறந்தது.

நிலத்தில் தூய்மை, உடலில் தூய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் தூய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்று விடுதலை பெற்றபாடில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளில்லை. கலகங்களின் தோற்றம் கடவுளிடத்திலில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை. ஆங்கார உணர்வின் தோற்றம் நெற்றியின்கண் இல்லை; ஆங்கு இலங்கும் திருநீற்றின் கண்ணும் இல்லை. பின் எங்கு?

நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துள் கருப்பு வைத்து மாநிலம் முழுவதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி, மனத்தின்கண் மாசறுக்கப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனிமனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால்-வாயால் தனி மனிதன். ஆயினும் அவன் படைத்திடும் வாழ்க்கை, தனி