பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனித வாழ்க்கையன்று-சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை! அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம்.

ஈண்டு உலகம் என்பது மனித சாதியைப் போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல, இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு. ஆனால், ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சீலத்தின் சிதை வினையும் ஏமாற்றங்களையும் வரலாறுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன. கீழே விழுந்து விடாமல் தன்னை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல மரம் செடிகள் உலகம் கெடவில்லை; கொடிகள் உலகம் கெட வில்லை; விலங்குகள் உலகமும் கெடவில்லை.

ஆனால், மனிதனோ தம்பட்டம் அடித்துக் கொள்ளுகிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம். ஐயகோ! மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கே இருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு: நுமக்கு அறிவு இருப்பதின் அடையாளம் என்ன? அதற்குப் பதில் ஆரவாரம்தானோ?

விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால், ஒர் அதிசயம். விலங்குகள் அனுபவிக்கும் துன்பம் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி அறிவின்மையின் காரணமாகச் சில அல்லல்களையும் அடைகின்றன. ஆயினும், மனித சாதியைப் போல் செயற்கை இன்பங்களும், செயற்கைத் துன்பங்களும் விலங்கினத்திற்குக் கிடையா.

அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடைபெறுகிறது என்று இடித்துக் கேட்க