பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

75




அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கை என்பது என்ன? ஒன்றரை.அடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ, நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ, உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ, இல்லை, இல்லை, மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்.

மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ங்னம் வாழ்தல் வாழ்க்கையெனக் காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க’ என்று வள்ளுவம் கூறுகிறது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றலிருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின்வழி இழுத்தெறியப்படாமல் மேலே உயர ஓங்கி உயர இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம் செடிகொடிகளுக்கு வேர்களும் கிளைகளும் அந்த நோக்கத்துடனே அமைந்தனவாம். மரம் செடி கொடிகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று வளரும் களமாக மாற்றி, தான் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்திற்கும் கூட வாழ்வு அளிக்கின்றன.

ஆனால், மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகின்றான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினான்.