பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

77



ஒழுக்கம்

ரந்துபட்ட இந்த வையகத்தை, உயிரினத்தை, மக்கள் தொகுதியை ஒன்றோடொன்று முரணாகாமல்-மோதாமல் வழி நடத்துவது ஒழுக்கமேயாகும். நல்லொழுக்கத்தின் ஊற்று அன்பேயாகும். யாருக்கும் தீமை செய்யாது, எந்த உயிருக்கும் தீமை செய்யாது எவ்வுயிர்க்கும் அன்புகாட்டி, நல்லன. செய்தலே நல்லொழுக்கம்.

இத்தகைய நல்லொழுக்கம் தன்னியல்பினதாகஆற்றொழுக்காக அமையும்பொழுது உயர்ந்த ஒழுக்கமெனப் போற்றப்பெறுகிறது. ஒழுக்கத்தின் குறிக்கோள் உயிர்களுக்கு அன்பு செய்தல் ஆனாலும், அதன் செயல் முறைகள் விரிந்தது; நுட்ப மானதுங்கட! உயிரிலும், உணர்விலும், அறிவிலும், புலன்களிலும், பொறிகளிலும் தூய்மையும் துணிவும் கொண்டோரே ஒழுக்கமுடையவராய் வாழ்க்கையில் வெற்றிபெற இயலும். தூய்மையும் துணிவுமே துணை.

நல்லொழுக்க நடைப்பயணத்தில் விழுந்து விழுந்து எழுவோரே ஏராளம். இன்று ஒழுக்கமுடைமை என்ற சொல்லுக்கு நடைமுறையில் பொருள் மிகக் குறுகிய எல்லைக்கு வந்துவிட்டது. பொதுவாக மனிதனிடத்தில் தன்னிலை ஒழுக்கம், பொதுநிலை ஒழுக்கம் அல்லது சமுதாய ஒழுக்கம் என்ற இரண்டுவகை ஒழுக்கம் தேவைப்படும். மனிதர்கள் இவ்விரண்டிலும் ஒருசேர வெற்றிபெற்று விளங்குவதில்லை.

ஆனால், நம்முடைய நாட்டு அமைப்பில் தன்னிலை ஒழுக்கத்தில் வெற்றி பெற்றோர் எண்ணிக்கை மிகுதி. தன்னிலை ஒழுக்கத்தில் வெற்றிபெற்றுப் பொதுநிலை ஒழுக்கத்தில் வெற்றி பெறாது போனால், கொங்கண முனிவர், இராவணன், சூரபத்மன் ஆகியோர் அடைந்த