பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆரூரர், தில்லையின் திரு நடனத்தை ஐந்து பேரறிவும் ஒரு நெறியில் நின்று வழிபாடு செய்த நிலையே பத்திமையின் முதிர்ந்த நிலை. பொறிகளும் புலன்களும் அருள் வழியால் தலைவன் வழியில் நிற்கும்போது ஏது துன்பம்? எரிகின்ற நெருப்பில் குப்பைகள் விழுந்தால் நெருப்பு அணையாது. தூய்மை கெடாது. ஆனால், குப்பை எரியும். குப்பைகள் துய்மையுறும்.

பத்திமையுடையோர் எங்கும் இறையருளைக் காண்பர்; எதிலும் இறையருளைக் காண்பர்; அவர்களுக்கு விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை, பகைவரும் இல்லை, நண்பரும் இல்லை. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் ஓடி வருவதைப் போலப் "பள்ளந்தாழ் உறுபுன லாகத்" திருவருளை நோக்கியே உணரத் தலைப்படுவர். செயல் செய்வர். பத்திமை என்பது செயலற்ற நிலையன்று. செயல் நிறைந்த நிலை.

ஆனாலும் பத்திமையின்பாற்பட்டொழுகுபவர்கள் செய்யும் செயலில் இலாப நோக்கு இல்லை. புகழ் நாட்டமில்லை. உயிர்கள் இன்டறுதலே நாட்டம். பத்திமையிற் பழுத்தவர்கள் வேற்றுமைகளை அகற்றுவர். ஒருமைப் பாட்டை வளர்ப்பர். அதுவே தூய அருள் நெறி.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில

என்பார் வள்ளுவர். துன்பத்தின் பிறப்பிடமே வேண்டுதல் வேண்டாமை தான். உண்ணுதற்குத் தகுதியில்லாத கிழங்கை உண்ணும் நிலைக்குச் சுவையாக்கித் 'தருவது அவித்தல் தொழில், கிழங்கு அவித்தல், இட்டலி அவித்தல், இடியாப்பம் அவித்தல் என்ற சொல் வழக்கை அறிக. அதுபோல் தனக்கும் மற்றவர்களுக்கும் சுவையற்றவையாக-ஆனாலும் சுவையுடையன போல நடிக்கும் பொறிகளை அன்பில் நனைத்து, உணர்வுகளை அவித்தலே பத்திமை நெறி.