பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

81



ஐம்பொறிகளை அடக்குதல் என்பது பொருந்தா வழக்கு. இயலுவதும் அன்று. ஐம்பொறிகளை, தன்னல வழியில் நாடிச் செல்லும் பொறிகளை மடைமாற்றிப் பத்திமையில்- அருள் வழியில் செலுத்துக என்பார் திருமூலர்.

உண்ணுதல் நாள்தோறும் நடைபெறும் கடமை. உண்ணுதற்காகவே வாழ்தல் விலங்கியல்பு. வாழ்தலுக்காக உண்பது வளர்ந்த நிலை மற்றவர்களை வாழ்விக்க வாழ்தல் பத்திமையில் பழுத்த அருள்நிலை. மற்றவர்களை வாழ்விப்பதற்குரிய தொண்டு செய்ய உடல்நலம் வேண்டும் என்பதற்காக உண்பது அருள்நிலை. பொருளை இவறிக் கூட்டி எண்ணிச் சேர்ப்பதற்காக ஈட்டுவது அசுர குணம். இரப்பவர்க்கு ஈந்து உதவப் பொருள் வேண்டும் என்று ஈட்டுவது தவம்: அறநெறி முயற்சி.

பொறிகளால் மற்றவர்களுக்குத் துன்பம் தாராமல் அவித்துப் பக்குவப்படுத்திய நிலையே அன்பின் நிலை; இன்ப நிலை, அப்போதே இறைவன் அருள் அவர்கள் வாயிலாக வையத்திற்குக் கிடைக்கிறது. எல்லாச் செல்வத்திலும் மேற்பட்டது அருட்செல்வம்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்

என்பது வள்ளுவம்.

அருள் நெறியில் வையகம் வளரும் பொழுது துன்பம் தீரும். என்றும் இன்பம்பெருகும். குறைவிலாது உயிர்கள் வாழும். நீதி நிலவும். விண்ணகத்தை மண்ணகத்தில் காணலாம். அதுவே வள்ளுவர் வழி. அவ்வழியில் சென்று வாழ்க்கையாகிய மாளிகையைக் கட்டுவோம். அந்த மாளிகையில் நானிலத்தார் அனைவரும் ஒரு குலமாகக் கூடிக் கலந்துண்டு மகிழ்வோம்.