பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

85



திருக்குறள் தேசிய நூல்

யிர்க்குலம் எண்ணில அளப்பில; கணக்கில் வந்துள்ள உயிர்க்குலம் ஒரு பகுதியே! பெயர் பெற்று வழக்கில் வந்துள்ள உயிர்க்குலமும் ஒரு பகுதியே! நம்முடைய கவனத்தைக் கடந்து-பெயர்களைக் கடந்து வாழும் உயிர்க்குலம் பலப் பல. உயிர்க்குலத்தின் எண்ணிக்கை பல நூறாயிரமாக இருப்பினும் அவற்றுள் விஞ்சிய பெருமை மனித உயிருக்கே உண்டு. மானிட உயிர் விலைமதிப்பற்றது.

பலநூறு ஆண்டுகளின் வளர்ச்சியில்-முதிர்ச்சியில் முகிழ்த்ததே மானிட உயிர். மற்றைய உயிர்த்தொகுதிகள் வெற்றிக்கு ஆட்படுபவை. மானிட உயிர் வெற்றிகளை ஆளுபவை. “மானுடம் வென்றதம்மா!” என்பான் கம்பன். மானிட உயிரின் அருமை நோக்கித்தானே "மனிதப் பிறவியும் வேண்டுவதே" என்றார் அப்பரடிகள். இயல்பில் மானிட சாதி உயர்வுடையதே.

ஆயினும்; உயர்வுக்குரிய காரணங்கள் முற்றப் பொருந்தாவிடின் "மானிட அமைப்பில் விலங்குகள்” என்று இலக்கியம் ஏசும்; சான்றோர் பழிப்பர்! மானிட சாதியின் உயர்வுக்கு அடிப்படை அது அறிவுள்ளது என்பதுதான்! மனம் உள்ளது. இல்லை. இருக்கும் மனம் இயங்குவது; உணர்வுடையது. இந்தச் சிறப்பியல்புகள் சிறப்பாக அமையாது போனால் மானிட சாதியிலும் விலங்கியல் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் காரணமாக வேற்றுமைகள் கால் கொள்கின்றன. அவ்வழி பகை கால்கொள்கின்றது; கலகங்கள் தோன்றுகின்றன போர்கள் மூளுகின்றன. வளம்-வறுமை வேறுபாடுகளின் காரணமாகப் பொதுமை மறைகிறது.