பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருவள்ளுவர் காலத்திற்கு முன்பும், அவர் காலத்திலும் குறுகிய நாட்டுப்பற்று வளர்ந்து மனித உலகத்தை அழித்துக் கொண்டிருந்தது. ஆனால், திருவள்ளுவர் இந்த நாட்டுப் பற்றைக் கடந்து சிந்தித்தார். அவரது சிந்தனை உலகம் தழிஇயது. திருவள்ளுவர் நாடு பற்றிய பல குறட்பாக்கள் இயற்றி உள்ளார். எந்த நாட்டைப் பற்றி? தமிழ் நாட்டைப் பற்றியல்ல; "நேமம் நாட்"டைப் பற்றியுமல்ல. திருவள்ளுவர் காட்டும் நாடு, மக்கள் வாழும் நாடு.

வள்ளுவர் கூறும் நாட்டிலக்கணம்-எல்லைகளின் இலக்கணமல்ல. திருவள்ளுவர் நாட்டு எல்லைகளுக்கு உட்பட்டுத் தவிக்கும் மனிதனை எல்லைகளைக் கடந்து வளர்க்க ஆசைப்பட்டார். நாடு, எந்த நாடாக இருந்தாலென்ன? ஊர் எதுவாக இருந்தாலென்ன? அந்தந்த நாட்டையும் தான் பிறந்து வளர்ந்த நாட்டைப் போலவே உறவாலும் உணர்வாலும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அங்ங்னம் வாழக் கற்றுக் கொள்ளுதலே கல்வி என்றார்.

யாதானும் நாடாமால்

என்பது திருக்குறள். நாட்டுப்பற்று என்ற பெயரில் குறுகிய எல்லைப்பற்றை உண்டாக்கவில்லை. குறுகிய நாட்டுப்பற்றை அல்லது வெறியை உண்டாக்கத்தக்க வகையில் திருவள்ளுவர் ஒரு சொல்லைக்கூடப் பெய்யவில்லை, எந்த ஒரு மலையையும் கடலையும் ஆற்றையும் எடுத்துக்காட்டுக்குக் கூட அவர் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. திருவள்ளு வரின் நாடு இது அன்று; அது அன்று. மானிடசாதி வாழும் உலகமனைத்தும் அவருடைய நாடேயாகும்.

அப்படியானால், படை அரண் ஆகியன பற்றி வள்ளுவர் கூறியுள்ளாரே என்று கேட்கலாம். அவை நாட்டெல்லையின் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு கூறியவையல்ல. அவை தற்காப்பு முயற்சி குறித்தனவே. நீதி,