பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

91



மனிதகுலம் முழுவதுக்கும் உரிமையாகிற வரையில் நீதியை, நீதியிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது. காப்பாற்றும் முயற்சிக்கே வள்ளுவர், படை என குறிப்பிட்டுள்ளார்.

உலக இலக்கியங்களிலேயே நாட்டு வெறியை உண்டாக்காத இலக்கியம் திருக்குறள் ஒன்றே. மார்க்ஸ் மாமுனிவரும் குறுகிய எல்லைக்கோடுகளைக் கண்டிக்கிறார். பொதுவுடைமைத் தத்துவத்தின் இலக்கே சர்வதேசீயம்தான். இந்த இழையோட்டம் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் இல்லாமல் இல்லை. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று ஒலித்தது பாராட்டுதலுக்குரியது. ஆனால், அந்தத் தத்துவம் முழுமையடையவில்லை.

சேக்கிழாரும் கூட அற்புத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பொழுது "உலகம் உய்ய” என்று கூறியுள்ளார். ஆயினும் தொண்டை நாட்டைச் சேக்கிழார் பாராட்டுவதைப் பார்த்தால் தொண்டை நாட்டுப்பற்றே தோன்றும். அது அவர் காலத்தின் சூழ்நிலை.

ஆனால், திருக்குறள் படித்தால் நாட்டுப்பற்று வளரும். வள்ளுவர் காட்டும் நாடு எது? எல்லைகளில் சிக்கிச் சீரழியும் நிலப் பரப்புக்களை வள்ளுவர் நாடு என்று கருதவில்லை. மக்கள் வாழும் நிலமனைத்தும் வள்ளுவரது நாடே. ஆதலால் குறுகிய எல்லைக் கோட்டுப் பற்றுக்களை அகற்றும் திருவள்ளுவரது திருக்குறளே தேசீய நூலாக இருப்பதற்குத் தகுதியுடையது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.