பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
மண்ணும் விண்ணும்

1. வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

இன்றையச் சமுதாய அமைப்பைப் பொறுத்த வரையிலே ‘வரலாற்றுப் போக்கில் வள்ளுவர்’ என்ன கருதுகிறார். நீண்ட நெடுங்காலமாக இந்த நாட்டில் உள்ள பல்வேறு சமயத்தினரும், இங்குள்ள எல்லா அரசியல் தரப்பினரும், பல்வேறு கொள்கைகளையும் தத்துவங்களையும் கொண்டவர்களும் ஏற்றுப் போற்றும் ஒரு பொது நூலாகத் திருக்குறள் திகழ்ந்தாலும் அது எல்லோருக்கும் வழக்கறிஞராக விளங்க முடியுமா? என்பதுதான் ஒரு பெரிய கேள்வி.

தூற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-போற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுகிறான். சமுதாயத்திற்கு நலன் செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-தீமை செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று சொன்னால், இருதரப்பினருக்குமே திருவள்ளுவர் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுகிறார் என்று கூறிவிட முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.