பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு தவறு நடந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில்-சிந்தனையில் தொடர்ந்து தவறு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற பலவீனமான மனோபாவம் பலரிடம் அமைந்திருக்கிறது. அத்தகையவர்கள் மிகச்சிறந்த நூலாக-மக்கட் குலத்தை வாழ்வாங்கு வாழவைக்கும் மறையாக விளங்கும் திருக்குறளைத் தங்கட்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள் - மாற்றிக் கொள்ளுகிறார்கள். அது நீதியுமாகாது-நேர்மையு மாகாது என்று காட்டுவது நமது பொறுப்பும் கடமையுமாகும்.

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்று நாம் சொல்லுகின்றபோது, நிறையக் கருத்துக்களைக் கூற முடியும். ஒரு கவிஞன் அல்லது ஒரு புலவன், அல்லது ஒர் எழுத்தாளன் சிந்தித்து ஒரு சிந்தனையைப் படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். வெறும் புலமையினாலே மட்டும் ஓர் இலக்கியம் தோன்றினால் அதை வியந்து போற்ற முடியாது. வெறும் பக்தியினாலே-பாசத்தினாலே ஓர் இலக்கியம் தோன்றினாலும் அதை வியந்து பாராட்ட முடியாது. கவிதை படைக்கும் ஆற்றலினால் மட்டும் ஓர் இலக்கியம் தோன்றுமானால் அதையும் நாம் கையேந்தி வரவேற்க முடியாது. அந்தப் புலவன்-பக்தன்-கவிஞன்-எழுத்தாளன் வாழ்ந்த காலச் சமுதாயத்தில் நடை முறைகளை ஆழமாக-தெளிவாகப் புரிந்துகொண்டு அந்தச் சமுதாயத்திலே-நடைமுறையில் இருந்த தவறுகளை குறைகளை எண்ணிப்பார்த்து அந்தத் தவறுகளை மாற்றி குறைகளைக் குறைத்து நிறையுடைய செழுமையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பயன்படும் அவன் பயன்படுத்தும் சாதனமே இலக்கியம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.