பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற் சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலகவாழ்க்கையிலிருந்தே சிரிப்புக்கிடமானவைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன். வாழ்வைப் பார்த்து-வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.

ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்க்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான். வழிநெடுக அதைக் கொறித்துத் தின்று கொண்டே போகிறான். இடையில் வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து "தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து - வெலவெலத்து - வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து "என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன், மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன் என்னைப் பார்த்து - உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே" என்றான். "சரியப்பா, நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடிய வதங்கிய நிலையில் நின்றானே ஒரு ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்று கெஞ்சிக்கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது அவனுக்குக் கொடுத் திருக்கக்கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது" என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச்சுவையையும் பகுத்துண்டு பல்லுயி ரோம்பும் பண்பையும் நாம் நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.