பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துமொழிகள்



189



நமது சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக-அன்புவழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வு பெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை, எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்பட வேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறிவிட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேகஉதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அவித்துவிடும். அதேபோல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப் படைச் சூழலும் கெட்டுவிடும்.

ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்று தலுக்குள்ளாகி யிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கைகொள்ள வேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழி வகுத்துத் தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழ முடியும். உலக உத்தமர் காந்தியடிகள் கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.

உலகியலில் சிந்தனைக்கு வித்திடக்கூடிய சிரிப்பை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது-அது தொன்றுதொட்டு வழிவழிவந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து - என்றும் அன்பாய் வாழ வேண்டும்.