பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



193


உயிர்க்குறுதி

தமிழ்மரபு உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப்பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர் தோற்றமும், அழிவும் இல்லாத நிலையான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை “மன் உயிர்" என்னும் சொல்லாட்சியால் உணரலாம், இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குறியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் இயல்பான அறிவன்று. உயிர் அறிவுபெற்று விளங்குதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழி வகைகளையும் ஐயத்திற்கு இடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குறிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச்சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச்சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர். நலம்பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் (குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக் கூடிய நல்ல

தி.14.