பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ஙனம் மனிதகுலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இந்தவகையில் கார்ல் மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக்கொள்ளத் தக்கது. பாராட்டத்தக்கது. அவர் "உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமையில்லை" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையார் உடையரோ மற்று.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றி சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல், ஏன்? பொருளியலே உலகியலும்கூட "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றையச் சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாக நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? துய்த்தற்குரியவையே பொருளாகும். "யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல" என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து