பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றையத் தமிழக அரசு திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன்வந்திருக்கிறது. இது நன்றி உணர்வுடன் என்றும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணிசெய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழினத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப்போமாக.