பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1O

வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம் வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவுநெறி என்று துறவிகளிடம் மிக்க கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள் தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மணம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில் திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். “தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். 'உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை