பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாமும் அவ்வழியில் தமிழ்க் குடியினை வளர்க்கும் பணியில் பருவம் பார்க்காது, சோம்பலின்றி, மானம் கருதாது உழைப்போமாக!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

வள்ளுவர் வாக்கு (3)

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

இந்தத் திருக்குறளின் பொருளை நோக்க இது விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஈகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஒப்புரவறிதல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? அல்லது குடிசெயல்வகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? - என்றெல்லாம் சிந்தனை ஒடும்! ஆனால் இந்த அதிகாரங்களில் இந்தத் திருக்குறள் இல்லை! பின் எந்த அதிகாரத்தில் இருக்கிறது? "கொல்லாமை" அதிகாரத்தில் இந்தத் திருக்குறள் இருக்கிறது? ஏன்? என்ன இயைபு?

ஒருவனை, கருவிகள் கொண்டு கொலை செய்தல் மட்டும் கொலை என்ற கருத்து இன்று நிலவுகிறது! சமய நூல்கள், சட்டங்கள் இப்படித்தான் கூறுகின்றன! ஆனால், திருவள்ளுவர் இதில் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறார்! தருகிறார்! வாழப்பிறந்த உயிர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு, சமுதாயத்திற்கு இருக்கிறது. அரசுக்கு இருக்கிறது! ஏன்? ஒவ்வொரு மனிதனுக்குமே இருக்கிறது! இங்ஙனம் கடமை உணர்ந்து செய்தலே அறம்! உலக மொழிகளின் மறைநூல்கள், மற்ற இலக்கியங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அறங்களில் எல்லாம் சிறந்தது. பகுத்துண்டு வாழ்தல் என்ற அறம். இது நூலோர் தொகுத்துக் கூறும் அறங்கள் பலவற்றிலும் சிறந்த அறம். தலையாய அறம்!