பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



247


7. உலகம் தழீஇயது ஒட்பம்!

மானுடத்தின் வெற்றி பொருந்திய வாழ்க்கைக்கு தேவை அறிவு. திருக்குறள், அறிவைக் கருவியென்று இனங் காட்டுகிறது. அறிவு என்பதற்குத் தெளிவான இலக்கணத்தைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. அறிவு, எல்லைகளைக் கடந்தது; மொழி, இனம், சமயம், நாடு முதலிய சிறைகளைக் கடந்தது! சிந்தனை சிறைப்பட்ட இடத்தில் அறிவு ஆக்கம் பெறுவதில்லை. ஆதலால், அறிவுக்கு மொழியெல்லையில்லை. அறிவு வளர்ச்சிக்கு மொழி முதலியவை தடையேயாம். பல மொழிகள் கற்பதும் பல நாடுகள் காண்பதும் உலகமாந்தருடன் கலந்துறவாடுவதும் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் வாயில்கள். உலகம் தழுவிய நிலையில் வாழும்போதுதான் அறிவு விரிவடைகிறது; வளர்கிறது.

"உலகம் தழீ இயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு”

என்பது குறள்.

"உலகம் தழீஇயது ஒட்பம்" என்பதற்கு "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்ற வாக்கின் அடிப்படையில் உயர்ந்தோர் என்று பொருள் கொண்டு அத்தகு உயர்ந்தோரிடத்தில் உறவு கொள்ளும் நல்லறிவும் அவ்வுறவில் மலர்தலும் கூம்பலும் இல்லாமல் பேணுதலும் என்று பொருள் கொள்வாரும் உளர். மானுடத்தை உயர்ந்தார் - தாழ்ந்தார் என்று பிரிவினை செய்தல் இற்றைத் தலைமுறைக்குப் பொருந்துவதல்ல. உலகத்தில் மிகப் பெரிய மானுடத்தைப் படைத்து வளர்ந்து வரும் ஜப்பான் நாடு, மனிதனை அவன் உள்ளபடியே அங்கீகரித்தல், வளர்த்தல், உயர்த்துதல் என்ற வழியிலேயே அணுகுகிறது என்பது எண்ணத்தக்கது.