பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



309


மற்றவர்கள் துன்ப நீக்கமே இவர் தம் வாழ்வு. இனிய செல்வ, இவர்கள் மருந்து மரம் அனையர்.

ஊருணி, மாந்தரிடத்திலிருந்து யாதும் பெறாமல் உண்ணும் நீர் வழங்குகிறது. ஆயினும் தற்காப்பு நிலை. பயன் மரம், சமுதாயத்தினிடமிருந்து கொஞ்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் பல மடங்கு மதிப்புள்ள கனிகளைத் திருப்பித் தருகிறது. மருந்துமரம் சமுதாயத்தினிடத்தில் மிகமிகக் குறைவாகப் பெற்றுக் கொண்டு தாம் பெற்றுக் கொண்டதை விடப் பலமடங்கு சமுதாயத்திற்குத் திருப்பித் தருகிறது. ஏன்? தன்னையே கூட அழித்துக் கொள்கிறது. இவை வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நிலை.

இன்றைய மனிதரோ, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த ஆக்கத்தை விரும்புவதில்லை; அதற்காக உழைப்பதில்லை! சமுதாயத்தின் நன்மையை நாடாமல் சமுதாயத்திற்கு மாறாக - எதிரான ஒன்றையே நாடுகின்றனர். சமுதாயத்தினிடத்திலிருந்து நிறையப் பெற விரும்புகின்றனர். தங்களுடைய ஆதாயத்திற்காகவே சமுதாயம் என்ற அமைப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். ஊதிய நிலையில் நாடு தழுவிய ஒரே ஊதியம் கேட்பர்! நாடு தழுவிய ஒரு மொழி விரும்பி ஏற்கமாட்டார்கள்; நாடு தழுவிய ஒரு நெறி ஏற்கமாட்டார்கள். எல்லாருக்கும் நன்மை விளையக் கூடிய வகையில் போராட்டங்கள் கூடப் பொதுமையாக அமைவதில்லை. இது இன்றைய போக்கு!

இனிய செல்வ, குறள்களைப் படித்துப்பார்!

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகலாம்
பேரறி வாளன் திரு”

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்”.

இன்ப அன்பு
அடிகளார்