பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சில வரலாற்று நிகழ்வுகளில் சிலர் பழிசுமத்தப்படுவர். சிலர் பாராட்டப்பெறுவர். வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் புகழுக்கும் பழிக்கும் உரியவர்கள் மாறுபடுவார்கள்! ஆதலால், நமது கவனத்திற்குரியது ஒரு தலைவர் பெற்றுள்ள விளம்பரம் அல்ல. அல்லது அந்தத் தலைவருக்குள்ள கூட்டம் கூட்டும் சக்தியல்ல; கூட்டமும் அல்ல. நல்லது செய்யும் மனப்பண்பும் ஆளுமையும் உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! அருச்சனை ஆடம்பரமாக - ஆரவாரமாக இருப்பதில் மூர்த்தி சிறப்புப்பெற்று விடாது. ஆதலால் யார் சொல்லுகிறார் என்று கவனித்தல் பயன் தராது. என்ன சொல்லுகிறார்? அதன் பயன் என்ன? என்று ஆய்வு செய்து உண்மை தெரிந்து வாக்களிக்க வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

'யார்யார் வாய்க் கேட்பினும்’ என்ற சொற்றொடரின் அமைவு ஆழ்ந்த சிந்தனைக் குரியது. ‘எவரேனும்', 'யாரேனும்’ என்ற வழக்குச் சொற்களுடன் இணைத்துச் சிந்திக்க வேண்டிய சொற்றொடர் ‘யார் யார்’ என்பது.

ஆதலால், தேர்தல் உரைகளைக் கேளுங்கள்! ஆய்வு செய்யுங்கள்! செய்திகள் முக்கியமானவை. செய்திகளை விடச் சொல்பவரின் தகுதியும் திறமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும்.

தமிழ், தனக்குரிய இடத்தைப் பெறுதல் வேண்டும்! துறைதோறும் தமிழ் வளர்ந்து இடம் பெறுதல் வேண்டும்! நாட்டில் வேலை வாய்ப்புப் பெருக வேண்டும்! வறுமை அகல வேண்டும்! வாழ்வு சிறக்க வேண்டும்! இதுவே நமது தேவை! நமக்குத் தேவை சோறும் துணியும் அல்ல! வாழ்வு தேவை! இவற்றை வழங்கக்கூடிய தகுதியும் திறனுமுடைய அணிக்கு வாக்களிப்பது நமது உரிமை; கடமை!

இன்ப அன்பு
அடிகளார்