பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, ஓரளவு அரசின் நிதி தொகுக்கப் பெற்ற நிலையில் அரசு, செலவுக்குரிய திட்டம் தயாரிக்க வேண்டும். இதனை ‘வகுத்தல்’ என்று கூறுகிறது, வள்ளுவம், இங்ஙனம் அரசு நிதியை வகுக்கும்பொழுது திட்டச் செலவுகள்-அதாவது மேலும் பொருள் வருவாயை அதிகரிப்பதற்குரியதாகவும், வேலை வாய்ப்புகள் அதிகம் தரக்கூடியதாகவும் உள்ள தொழிற்சாலைகள் அமைத்தல், பண்ணைகளை அமைத்தல், மனித வளத்தை மேம்படுத்தும் துறைக்கு அதிகமாக 60 விழுக்காட்டிற்குக் குறையாமல் ஒதுக்குதல் வேண்டும். ஒரு புதிய செலவை ஏற்கும்போது அதற்குள்ள நிதியைத் திரட்ட வேண்டும். சான்றாகச் சத்துணவில் கோழி முட்டை சேர்ப்பது என்று திட்டமிட்டால் மாவட்டத்திற்கு ஒரு நல்ல கோழிப் பண்ணை அமைக்கவேண்டும். இந்தக் கோழிப்பண்ணை, வியாபார ரீதியாகக் கோழி முட்டையைச் சத்துணவு மையங்களுக்கு விற்க வேண்டும். இலாபம் ஈட்ட வேண்டும். இதில் அரசுக்கு இலாபம், 200 பேருக்கு வேலைவாய்ப்பு, கோழி முட்டைகள் கிடைக்கும் உறுதிப்பாடு. தவறுகள் நடக்க வழியில்லை. கோழி முட்டைகளைச் சத்துணவு மையத்திற்கு வாங்கும் செலவு, கோழிப் பண்ணையின் இலாபமாக அமைய வேண்டும். இதுபோலச் செய்யலாம்.

இனிய செல்வ, நாளும் நிதி திரட்டும் புதுப்புது வாயில்கள் காணவேண்டும். நிதியைக் கணக்கிட்டுக் கச்சிதமாகத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியை மக்கள் மேம்பாட்டுக்கும் ஆட்சிக்கும் வகுத்துச் செலவழிக்க வேண்டும். இன்று உடனடியாக இல்லையானாலும் எதிர் காலத்திலாவது "எதுவும் இனாம் இல்லை" என்ற சமுதாயம் தோன்றி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்.

இன்ப அன்பு
அடிகளார்