பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ச்சிக்கு வாயில் வைத்து பயிற்றும் நூலே சிறந்த நூல்! மானுடத்தின் சென்ற கால வரலாறு இனி கிடைக்கத்தக்கதில்லை. சென்றவை சென்றவைதான்! நிகழ்காலம் என்பது நீரில் குமிழி போன்றது; விரைந்து செல்வது. காலதேவன் இறக்கை கட்டிக்கொண்டு பரப்பவன்! ஆதலால் எதிர்காலம் என்பது நிச்சயம்!

இனிய செல்வ! நீ கேட்பது உண்மைதான். நம்முடைய எதிர்காலம் உறுதிப்படுத்தப் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், மானுடம் வாழ்தல் என்பது ஒரு தொடர் வரலாறு. ஆதலால், பெரிதும் மானுட இனத்திற்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்கால மானுடத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்காலத்தைச் சீராக அமைப்பதற்குரியவாறு நிகழ்காலம் அமைய வேண்டும். எதிர்காலச் சமுதாயம் அறிவுடையதாக வாழ்தல் வேண்டும். அதற்கு இன்று வாழும் சமுதாயம் அடிப்படைகளை அமைத்தாக வேண்டும்.

இனிய செல்வ! அறிவு என்பது வளரும் தன்மையது; மாறும் தன்மையது. இது மொழியியல் வரலாறு; மொழியின் தன்மை! மானுடத்திற்கு வாய்த்த கருவிகளுள் சிறந்தது மொழியேயாம்! நம்முடைய தாய்மொழி, தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகக் காலம் தோறும் புதுமை நலன்கள் பெற்று வளர்ந்து வந்துள்ள மொழி! அதுபோல நம்முடைய மொழியின் வரிவடிவங்களும்-எழுத்துகளும் மாறி மாறி வளர்ந்து வந்துள்ளன.

இனிய செல்வ! இந்த யுகம் அறிவியல் யுகம், காலம், ஆற்றல் ஆகியவற்றைச் சிக்கனப்படுத்தும் யுகம். ஆதலால், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறுகிறார்கள். அதே போழ்து தமிழ் எழுத்துக்களை மேலும் சீர்திருத்தினால் தமிழ் மொழி கெடும் என்று சிலர் கூறுகின்றனர். இன்றைய தமிழகம் பரவலாக விவாதிக்க வேண்டிய பொருள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். பல்கலைக் கழகங்கள் தோறும்