பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மலிந்ததால் தற்காப்புக் கருதியே பலர் அரசியலைச் சார்கின்றனர்; அரசியல்வாதிகளுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதுவே, இன்றைய நம்நாட்டு நிலை.

இனிய செல்வ! பரஸ்பரம் நட்பு இல்லாதவர்கள்; நாட்டின் நலனில் அக்கறையில்லாதவர்கள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகின்றனர். அதனால் சட்ட சபையிலிருந்து பாராளுமன்றம் வரை சண்டை! நட்பாடல் தேற்றாதவர்கள் ஜனநாயக அரசியலுக்கு வருவதே தவறு! அவமானம்! பகைமையை, குழுச் சண்டைகளை வளர்ப்பவர்கள் சர்வாதிகாரிகளே! ஜனநாயக வாதிகள் அல்லர்! அரசு அமைத்து ஆள ஒரு கட்சிக்கு உரிமையே தவிர, அரசே ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல? ஆளப்படுபவர்கள் அனைவர் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதை நினைவிற் கொள்க! கட்சி-பிரதி கட்சி கருத்து வழியேயாம்! பகை வழியன்று. ஆனால், இன்றைய நடப்பு அரசியல் உலகில் காழ்ப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது! கலகம் செய்கின்றனர்! வசைமொழிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்! இது ஜனநாயகம் அல்ல!

ஆந்திர மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு! நாடாளும் பிரதமரும், ஆந்திர மாநில முதல்வரும் அது பற்றிக் கலந்து பேசவில்லை. ஒன்றாகச் சேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய முன்வரவில்லை! இனிய செல்வ, ஏன் என்றா கேட்கிறாய்? ஜனநாயகப் பண்பில் காலூன்றாததே காரணம். இனிய செல்வ, ஆந்திர மக்களின் நலனிலும், கட்சி-பிரதி கட்சி உணர்ச்சியே விஞ்சி நிற்கிறது என்பதே உண்மை! நாடாளும் பிரதமர், மாநிலங்களுக்கு வந்தால், மாநில முதல்வர்களிடம் தனியே சிலமணி நேரம் சமூகம், பொருளாதாரம் பற்றிக் கலந்து பேசுவதில்லை; கலந்து பேச விரும்புவதில்லை. இவையெல்லாம் ஜனநாயகத்தில் நாம் வளராமையின் அடையாளங்கள்! மக்களாட்சிமுறை அறிவு நலத்தில் நாம் வளரவில்லை என்பதன் வெளிப்பாடு! பொது வாழ்வில் குழுக்கள், உட்குழுக்கள் இவைகளின் தோற்றமும் வளர்ச்சியும் நாட்டைச் சீரழிக்கும். ஜனநாயக ஆட்சி