பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் புரட்சித்தலைவி அவர்கள் காவிரி நீர் தாவாவுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எண்ணினார். உறுதியாக எண்ணினார். இன்று காவிரி நீர் தாவாவைப் பற்றி எல்லாரும் பேசுகின்றனர். மத்திய மாநில அரசுகள், இந்திய உயர்நீதி மன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள் இப்பிரச்சினை பற்றிப் பேசத் தலைப்பட்டுள்ளன; விவாதிக்கத் தலைப்பட்டுள்ளன; செய்தித்தாள்கள் பலமான விவாதத்தை நடத்துகின்றன. இது ஒரு நல்ல அறிகுறி! இங்ஙணம் காவிரி நீர் தாவாவை நாடுதழுவிய நிலையில் விவாதிப்பது விரைந்து முடிவுக்கு வரத் துணையாக அமையும்.

இனிய செல்வ, இது மட்டுமா? தமிழக மக்களாகிய "நாமும் காவிரியில் தண்ணீர் தேவை! ஆடி பதினெட்டு விழாவிற்குத் தண்ணீர் தேவை, தஞ்சையின் நஞ்சைகள் பழையகாலம் போல் நெற்களஞ்சியமாக வேண்டும்” என்று எண்ணினோம்; திண்ணமாக எண்ணினோம். அந்த எண்ணத்தின் ஆவேசம் இயற்கையைக் கூட இயக்கியிருக்கிறது! ஆம்! பருவ மழை காலத்தில் பெய்யத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் கொள்ளளவு போக எஞ்சிய தண்ணீர் கொள்ளிடம் வழியாகக் கடலுக்கு அனுப்பப்படுகிறது! ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளன்று நாம் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடினோம். கர்நாடக மாநிலத்தார் தண்ணீர் தர மறுத்ததாலும் இயற்கை - இயற்கையையே திருமேனியாகக் கொண்டுள்ள இறைவன் தமிழக மக்களின் எண்ணத்திற்கு வெற்றியைச் சேர்த்துள்ளான்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

இன்ப அன்பு
அடிகளார்