பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, அதனால் சோவியத் ஒன்றியம் உடைகிறது! ஏன்? “தனிமனித வேட்டைக்காரர்கள் தோன்றி விட்டனர். மறந்தும் சிந்தனைத் தெளிவில் ஒன்றாகி விடக்கூடாது என்பதற்காகப் பகைமையை வளர்த்துக் கொள்வார். இனிய செல்வ, மக்கள் பல குழுக்களாக உள்ளனர். அந்தப் பல குழுக்களிடையே உட்பகை, ஒருவருக்கொருவர் அடுதலும் படுதலும் நிகழ்வதால் அரசியல் நடைபெறுவதில்லை; ஆட்சி நடைபெறுவதில்லை.

இன்று இந்த நிலை!

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வாழ்வியலை மார்க்சியத்தைக் கண்டு வாழ்ந்த நாடு - சர்வதேசீயத்தை எல்லையாக உடைய ஒரு நாடு, இன்று சிறுசிறு மாநிலங்களாகச் சிதறுகிறது. ஏன்? இனிய செல்வ, இதனால் மார்க்சியம் வாழ்வியலுக்கு ஒவ்வாதது என்று கொக்கரிக்கின்றனர் சிலர். இனிய செல்வ, மார்க்சியம் வரலாற்றுப்போக்கில் வெற்றி பெற்றே தீரும். வடிவங்கள் மாறுபடலாம்; உள்ளீடு மாறாது. இன்று சோவியத்தில் நடப்பது என்ன? சோவியத்தில் மனிதப் போராட்டங்கள் நடக்கின்றன. சித்தாந்தப் போராட்டம் நடக்கவில்லை. கோர்ப்பசேவின் மறு சீரமைப்பு மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பெற்றது உண்மை. ஆனால், பூரணமாக விவாதிக்கப் படவில்லை. இன்று உலகந் தழீஇய நிலையில் "தலைமை வழிபாடு” நடைபெறுகிறது. ஆதலால் கருத்தைச் சொல்லத் தயக்கம்! இந்தத் தயக்கம் சோவியத் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மனிதர்கள் மாறினார்கள். ஆனால், கொள்கைகள் மாறவில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை! இந்தத் ‘தனிமனி’தப் பிறவிகளின் அட்டகாசம் இன்று எங்கும் இருக்கிறது. அது சோவியத்திலும் இருக்கிறது. ஆயினும், ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்-மறுபடியும் வெல்லும்’ என்று காத்திருப்போமாக!