பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”

(169)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை”

(859)

என்ற திருக்குறள்களால் அறிய முடிகிறது. ஆம்! நமது நாட்டுக்கு ஏற்ற பொருளாதாரமாகத் திருக்குறள் காட்டுவது ஒப்புரவறிதலாகிய கூட்டுடைமைப் பொருளாதாரமேயாம். கூட்டுடைமைப் பொருளாதாரத்தில் சுரண்டும் தன்மை இல்லை; ஏகபோகம் இல்லை. அறிவறிந்த ஆள் வினையுடையோர் பலர் கூடிப் பொருளைச் செய்து ஒப்புரவு அறிந்து ஒழுகி வாழும் கூட்டுடைமைப் பொருளாதாரம் நமது நாட்டுக்கு ஏற்புடையது. தனி உடைமைப் பொருளாதாரம் இருப்பதில் தவறில்லை. ஆனால் சமூக மேலாண்மையின் கீழ் தனி உடைமை இருக்கலாம். பொதுத்துறை வரவேற்கத்தக்கது. ஆயினும் நமது நாட்டுப் பொதுத்துறையில் தொழிலாளர்கள் பங்கும் மக்கள் பங்கும் இல்லை. இந்தியாவில் பொதுத் துறை என்பது அரசின்-ஆள்வோரின் ஏகபோக உடைமையாக இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது எப்படி பொதுத்துறையாக இயலும்? பொதுத் துறை ஒருவகையான மக்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் துறையாக அமையின் வரவேற்கலாம். இந்திய நாட்டின் சூழ்நிலையில் இந்தியர்களுடைய மனோநிலையில் தனி உடைமைப் பொருளாதாரக் கொள்கை பயன்தருமா என்பது ஐயப்பாடே! அதனால்தான் திருவள்ளுவர் தனி உடைமையை விவரித்துக் கூறவில்லை போலும்! இனிய செல்வ, படிக்கவும்; சிந்திக்கவும்; எழுதவும்! கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெறட்டும்!

இன்ப அன்பு
அடிகளார்